தருமபுரி அருகே மின்வேலியில் சிக்கிய 3 யானைகள் உயிரிழந்தன!

தருமபுரி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து 3 யானைகள் மரணத்துக்கு காரணமான விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி அருகே மாரண்ட அள்ளி பகுதியில் இன்று காலை 3 யானைகள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்திருந்தன. இது தொடர்பாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலக்கோடு வனத்துறையினர், போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது பாறை கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார் முருகேசன். இந்த மின்வேலியில் சிக்கிதான் 3 யானைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தன. இதனால் முருகேசன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.