உலகிலேயே அதிக அடக்குமுறைக்கு உள்ளாகும் ஆப்கானிஸ்தான் பெண்கள்: ஐ.நா.!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிக அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 2021இல் ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் உலகை பரபரப்பான சூழலுக்குத் தள்ளி வருகிறது. தலிபான் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்பது சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள புதிய ஆட்சியாளர்கள் பெரும்பாலான பெண்களை அடக்கி ஆள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். பெண்களுக்கு பல விதிமுறைகளும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் தடை விதிக்கும்படியான சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்கள் மேற்கல்வி கற்கவும், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலை முதல் கால் வரை பெண்கள் தங்களை மறைத்துக்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தலிபான்களின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்பாக உலகின் மிகவும் அடக்குமுறை நாடாக உள்ளது என்று ஐ.நா பொதுச் செயலாளரின் சிறப்பு பிரதிநிதியும், ஆப்கனின் தூதுக்குழுவின் தலைவருமான ரோசா ஒடுன்பயேவா கூறினார்.

கட்டுப்பாடுகள், குறிப்பாகக் கல்வி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான தடைகள் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. கனவுகள் சிதைந்து, ஒரு பெண்ணாக இருப்பதற்காக தண்டிக்கப்படுவது என்ற மிகவும் மோசமான சூழ்நிலைதான் அங்கு நிலவி வருகின்றது. ஆனால், தலிபான்களுக்கு குற்றஉணர்ச்சி ஏதுமில்லை, அவற்றிலிருந்து பின்வாங்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

மகளிர் தினத்தை முன்னிட்டு, சுமார் 200 மேற்பட்ட ஆப்கானிய பெண் வணிகத்தினர் காபூலில் தங்கள் தயாரிப்புகளின் கண்காட்சியை நடத்துவது வழக்கம். ஆனால், தலிபான் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரும்பாலானோர் தங்கள் வணிகத்தை இழந்துள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இங்குள்ள பெண்கள் தங்கள் உரிமைகளைக் கடைப்பிடிக்க முடியாது, அதேசமயம் மகளிர் தினத்தையும் கொண்டாடவும் முடியாது. ஏனென்றால் நாங்கள் பள்ளி, பல்கலைக்கழகம், வேலைக்குச் செல்ல முடியாது எனவே கொண்டாட எந்த நாளும் எங்களுக்கு இல்லை என்று அங்குள்ள பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அறிக்கையின்படி, 11.6 மில்லியன் ஆப்கானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.