வணிக வரித்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி!

வணிக வரித்துறையினருக்கு கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது, அது இது இனியும் தொடரக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

வணிக வரித்துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தடையாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டு விட்டது.

வணிக வரித்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று பேரவையில் கடந்த ஆண்டே அரசு உறுதியளித்தும் அது நிறைவேற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்தாண்டுகளாக பாமக குரல் கொடுத்து வருகிறது. வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆகியவற்றில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், வணிகவரித்துறையினருக்கு மட்டும் தாமதிக்கப்படுவது சமூக அநீதி. வணிக வரித்துறையினருக்கு கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது இனியும் தொடரக்கூடாது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு வணிக வரித்துறையினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வணிகவரித்துறையில் 120-க்கும் மேற்பட்ட உதவி ஆணையர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவற்றையும் உடனடியாக உரிய முறையில் நிரப்பி வணிகவரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.