“புன்னகை” என்ற பெயரில் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தின் தொடக்க விழா!

நந்தனம் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் புன்னகை-பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கின்றனர்.

சென்னை, நந்தனம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், “புன்னகை” என்ற பெயரில் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நடமாடும் பல் மருத்துவ ஊர்தியில் அளிக்கப்படும் பல் சிகிச்சையை மேற் பார்வையிட்டனர். அதை தொடர்ந்து “புகையிலை ஒழிப்பு” கையெழுத்து பிரச்சார பலகையில் கையெழுத்து இட்டு, மாணவர்களின் கல்விப் பொருட்கள். சிற்றேடுகள் மற்றும் குறுந்தகடுகளை அவர்கள் வெளியிட்டார்கள்.

பின்னர் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் நானும், நமது துறையின் செயலாளர் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து இன்று மாணவர்களுக்கான “புன்னகை” என்கின்ற புதிய திட்டத்தினை இந்த பள்ளியில் தொடங்கி வைத்து இருக்கிறோம். பள்ளிக் குழந்தைகளை பரிசோதித்து அவர்களுக்கு ஏற்படும் வாய்வழி நோய்கள், பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயன் தரும். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பல் பரிசோதனைகளை செய்யலாம். இதன்மூலம் அவர்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொதுவான நோய்களான பல் சொத்தை, ஈறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதை கண்டறிவதற்கும் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த பொழுது, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பல் துணை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றின் சீரிய ஏற்பாட்டில் இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்தமாக மாணவ மாணவியருக்கும் பல் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாயிலாக இத்துறைக்கு வைத்துள்ள கோரிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

இந்திய அளவில் 5 முதல் 15 வயது வரை குழந்தைகளுக்கு ஏறத்தாழ 50% முதல் 60% குழந்தைகளுக்கு பல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளது. எனவே இந்த நோய்களிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்களை காப்பதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்கள் இந்த நடமாடும் பல் மருத்துவ வாகனத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் செல்வார்கள். குறிப்பாக அரசுப் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்துகின்ற மாநகராட்சி பள்ளிகள், அதேபோல் அரசு நிதியுதவி பெறுகின்ற பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்வார்கள். சென்னையில் பயிலும் 54,000 மாணவர்களுக்கு பரிசோதனைகள் முடிவுற்றவுடன் தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி பங்களிப்போடு தமிழ்நாட்டின் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இருக்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்படவிருக்கிறது. இப்படி தொடர்ந்து நடத்தப்படவிருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள 4 இலட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன்பெற உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.