கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில் விஜயா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வேல்மயில், ஆனந்தமணி, ராஜா, ரவி உள்ளிட்ட 16 மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் 30 நாட்டிகல் மைல் தொலைவில் அனலைதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு விசைப்படகுடன் 16 மீனவர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் பருத்தித்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மீனவர்கள் கைது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மீனவர்கள் அவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன்பிடித்தால் கூட அவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்கின்றனர். இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மரபுவழியாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டால் குறைந்தது 20 குடும்பங்கள், அதாவது 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.