எடப்பாடி மீதான இந்த அரசின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கின் மூலம் தெரிகிறது: ஆர்பி உதயகுமார்!

எடப்பாடி பழனிசாமி மீதான இந்த அரசின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கின் மூலம் தெரிகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்த நிலையில், அந்த நபரை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரையில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். அப்போது விமான நிலைய பேருந்தில் பயணித்த போது ராஜேஸ்வரன் என்பவர் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார் எனப் பேசி பேஸ்புகில் நேரலை செய்தார். இக்காட்சியைப் பார்த்த எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட நபரின் செல்போனை பறித்து அவரை விமான நிலைய வளாகத்தில் சட்டையைப் பிடித்து இழுத்து வந்தார். ராஜஸ்வரனை அங்கிருந்து அதிமுகவினர் சிலர் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்திருந்தார். இதேபோல் ராஜேஸ்வரனும் எடப்பாடி பழனிசாமி குறித்து பேஸ்புக் லைவில் பேசிய போது, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி செல்போனை பறித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன், எம்.எல்.ஏ பி.ஆர்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களும், அதிமுக மாவட்ட கழக செயலாளர்களுமான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை கோரிப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரையில் நாளை(இன்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

சிவகங்கை மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையம் உள்ளே இருந்து பேருந்தில் வெளியே வரும் போது மோசமான கிரிமினல் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அசிங்கமாகப் பேசினார். அதையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அமைதியாகவே வந்தார். தொடர்ந்து அவர் கூச்சல் போட்டபோதும் எடப்பாடியார் அமைதியாகவே இருந்தார். விமான நிலையத்திற்குள் நடந்த சம்பவம் குறித்து எங்களுக்கே தெரியாது. ஒரு எதிர்க்கட்சித் தலைவரை, மக்கள் செல்வாக்கு பெற்றவரை திட்டமிட்டு வழக்கில் சேர்த்து பொய்யான குற்றச்சாட்டை காவல்துறை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் துணிச்சலாக இந்த வழக்கை போட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி மீதான இந்த அரசாங்கத்தின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கால் தெரிகிறது. இரவு நேரத்தில் ஜோடிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதால் இந்த அராஜத்தை அரங்கேற்றி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொதிப்போடு உள்ள தொண்டர்களை நாங்கள் ஆசுவாசப்படுத்தி வைத்துள்ளோம். அரசாங்கம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். நாங்கள் சொன்னதால் அதிமுகவினர் அமைதியாக உள்ளனர். ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஜெயம் தியேட்டர் அருகில் நாளை(இன்று) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதிமுக வழக்கறிஞர்கள் குழு சார்பில், ஆளுநர், உள்துறை செயலாளர், டிஜிபி, தென்மண்டல ஐஜி ஆகியோருக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்.

எதிர்க்கட்சித்தலைவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக அரசின் காவல்துறை உள்ளது. கண்ணியக் குறைவாக ஈபிஎஸ் நடக்கவில்லை. அதிமுகவினர் தாக்கியது குறித்து எங்களுக்கு தெரியாது. எங்கள் எல்லைக்குள் நடந்ததால் கொந்தளிப்போடு பேசுகிறோம். எல்லா மக்களாலும் நேசிக்கப்படும் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவர் மீது காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு தொடுத்துள்ளனர். அந்த நபர் தரக்குறைவாக நடந்தபோதும், எடப்பாடி பழனிசாமி கண்ணியக் குறைவாக நடக்கவில்லை. குற்றவாளி கொடுத்த புகாரை வைத்து வழக்குப் போடுவதை பார்த்தாலே சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது தெரியும். தனிநபர் தாக்குதலை எந்தவொரு மனசாட்சி உள்ள நபரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.