ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழப்பு: ரூ.20 லட்சம் நிதியுதவி!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அலுவலர் ஜெயந்தின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளார்.

அருணாசால பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த 2 பைலட்டுகளும் பலியாகினர். இந்த நிலையில் உயிரிழந்த 2 பைலட்டுகளில் ஒருவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டனர். லெப்டினண்ட் வி.வி.பி ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெய்ந்த் என்று அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மேஜர் ஜெயந்த் தமிழகத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெயந்த் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை மூழ்க வைத்துள்ளது. ஜெயமங்கலம் கிராமத்தின் வ.உ.சி தெருவில் வசித்து வரும் ஆறுமுகம் பிள்ளை – மல்லிகா என்பவருடைய மகன் ஜெய்ந்த் ஆவார். 37-வயதான ஜெயந்திற்கு ஸ்டெல்லா என்ற மனைவி உள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்பாக இவருக்கு திருமணம் முடிந்துள்ளது. இவருக்கு குழந்தை இல்லை.

இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நேற்று (16.03.2023) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ அலுவலர் மேஜர்.A. ஜெயந்த் உட்பட இரண்டு இராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து இன்று காலை என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தேன். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களை நேரில் சென்று, தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய இராணுவ வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திட அறிவுறுத்தினேன். தாய்நாடு காக்கும் பணியின்போது இன்னுயிர் ஈந்த மேஜர். A. ஜெயந்த் அவர்களின் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது இலட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.