தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருமண நிதிஉதவி வழங்கும் விழா நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திருமண நிதி உதவி திட்டம் , ஈவேரா மணியம்மை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற மகளிர் நிதி உதவி திட்டம், உள்ளிட்டவைகளில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பட்டப்படிப்பு படித்த 89 பேருக்கு 50 ஆயிரம் ரொக்க பணத்துடன் 1 பவுன் தங்கமும் மேல்நிலை கல்வி வரை படித்த 16 பெண்களுக்கு 25 ஆயிரம் ரொக்க பணத்துடன் 1 பவுன் தங்கமும் என 105 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் 2022 -2023 நிதியாண்டிற்கு 21 ஏழை பெண்களுக்கு ரூ , 1,25,832 மதிப்பீலான தையல் இயந்திரந்திரம் என இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 95 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மூலம் தான் பெண்களுக்கான திருமண உதவி திட்டம் தொடங்கப்பட்டது. பெண்கள் குழந்தைகளை பெற்றுகொடுக்கும் இயந்திரமாக இருந்த நிலையை மாற்றியமைத்தது பெரியாரும் நீதிகட்சியும் தான். பெண்களுக்கான முற்போக்கு சிந்தனையை திராவிட முன்னேற்ற கழகம் தான் எடுத்து வந்தது. தற்போது பெண்கள் பல முக்கிய பதவிகளில் இருக்க முதல் புள்ளி வைத்தது திராவிட இயக்கங்கள் தான். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பெண் கல்வியை ஊக்குவிக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் தொடங்கப்பட்டது.

படிக்கும் பெண்களுக்கு திருமண நிதி உதவி கிடைப்பதன் மூலம் அதிகமான பெண்கள் படிக்கத்தொடங்கி உள்ளனர். இதுபோன்று ஏராளமான திட்டங்களை தந்து பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றும், அதைவிட ஒருபடி மேலே சென்று தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பெண் கல்வியை ஊக்குவிக்க புதுமை பெண் திட்டத்தை உருவாக்கி கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கி வருகிறார். பெரியார் தொடங்கி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை செய்த நல்ல திட்டங்களின் வெளிப்பாடே ஆண்களை விட பெண்கள் அதிகளவில் கல்வி கற்று வருகிறார்கள். புதுமை பெண் திட்டம் மூலம் லட்சகணக்கான பெண்கள் கல்லூரி நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. சாதி, சமயம் என அனைத்தும் கடந்து எல்லோருக்குமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பெண் குழந்தைகளுக்கு அனைத்து உதவியும் வழங்கும் அரசாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் குடும்ப அட்டையில் இருக்கும் தாய்மார்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும். குடும்ப அட்டைக்கு மாதம் வழங்கும் ரூ 1000 என்பது இலவசம் இல்லை. அது பெண்களுக்கான உரிமை தொகை. இவ்வாறு அவர் கூறினார்.