தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் குறித்து காலம் தான் பதில் சொல்லும்: வடிவேலு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக மீண்டும் தேர்தல் பிரசாரமா? என்ற கேள்விக்கு நடிகர் வடிவேலு காலம் தான் பதில் சொல்லும் என்று பதிலளித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால பொதுவாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி, மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரே மேனேந்தல் மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் திறந்து வைத்து பேசினார்.

இந்த புகைப்பட கண்காட்சியை, நடிகர் வடிவேலு நேற்று மாலை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் படமாக எடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் இப்போது அமைச்சராகி விட்டதால் அந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும், அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பது தான் உணர்வுபூர்வமாக இருக்கும். எனவே அவரை அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்துவேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்று கேட்கிறீர்கள். அதற்கு என்னுடைய பதில், காலம் தான் பதில் சொல்லும். இவ்வாறு அவர் கூறினார்.