செப்- 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்!

குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத் தலைவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக திமுக சார்பில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தை அமல்படுத்தவில்லை என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.இதனையடுத்து நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்தை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேலு தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தாக்கல் செய்து முடித்தார். இந்த பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பான தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தொடர்ந்து நாளை தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது மேலும் பட்ஜெட்டின் மீதான விவாதம் மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை நடைபெறும் எனவும் வரும் ஏப்ரல் 21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.