மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும், தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்: வானதி சீனிவாசன்

மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும், தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்டை தி.மு.க., அரசு தாக்கல் செய்துள்ளது என்று கோவை தெற்கு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பா.ஜ.க., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவியர் அனைவருக்கும் மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என, 2021 சட்டப்சபையில் அறிவிக்கப்பட்டது. தேர்தலின்போது தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி, தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, வேறு வழியின்றி, வரும் செப்., 15 முதல் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால், அனைவருக்கும் வழங்காமல், தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்பது சொல்லப்படவில்லை. இத்திட்டத்துக்கு, 7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சரிபாதி குடும்பத் தலைவிகளுக்கு, 1,000 உரிமைத்தொகை கிடைக்காது. இது நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கென தனி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. திருக்கோவில் நிலத்தில், திருக்கோவில் நிதியில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் துவங்கிய பள்ளிகளில், ஹிந்து சமய கல்வி இருக்க வேண்டும். மற்ற மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில், அந்தந்த மதங்களில் பிரார்த்தனை பாடல்களுடன் பள்ளிகள் துவங்குகின்றன. அதுபோல, ஹிந்து கோவில் நிதியில் துவங்கப்பட்ட பள்ளிகளில், ஹிந்து சமய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்.

பத்திரப் பதிவு, சொத்து வரி என, தமிழகத்தின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஆனாலும், நிதி, வருவாய் பற்றாக்குறையை குறைத்து காட்டுவதற்காக, அரசு திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளது தெரிகிறது. 2023–24-ல் தமிழக அரசு, 1 லட்சத்து 43 ஆயிரத்து 197 கோடியே 93 லட்சம் அளவுக்கு மொத்த கடன் பெற திட்டமிட்டுள்ளதாகவும், இதனால், அடுத்த நிதியாண்டில், தமிழக அரசின் மொத்த கடன் , 7 லட்சத்து 26 ஆயிரத்து 28 கோடியே 83 லட்சமாக இருக்கும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கடன்களை குறைக்க நடவடிக்கை எடுப்பதுதான் சிறந்த நிர்வாகத்தின் அடையாளம். அதை தி.மு.க., அரசு செய்யவில்லை. மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும், தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்டை தி.மு.க., அரசு தாக்கல் செய்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.