சென்னை அப்போலோவுக்கு மாற்றப்பட்ட கனிமொழி கணவர் அரவிந்தன்!

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவருக்கு அளிக்கப்பட்ட தீவிர தொடர் சிகிச்சையின் காரணமாக உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு ஷிப்ட் செய்யப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று ஓரளவு குறைந்ததால் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு அரவிந்தனின் உடல்நிலையில் முன்னேற்றம் தென்பட்டது. இதையடுத்து விமானம் மூலம் கணவர் அரவிந்தனை சென்னை அழைத்து வந்த கனிமொழி, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிங்கப்பூரில் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை ஒட்டியும், தேவையான பரிசோதனைகளின் அடிப்படையிலும் அரவிந்தனுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.

கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் தகவலை அறிந்து நேரடியாக புறப்பட்டுச் சென்று மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதுமட்டுமல்ல தனது தங்கை கனிமொழிக்கும் தைரியம் அளித்துள்ளார். இதனிடையே கனிமொழி ஆதரவாளர்கள் பலரும் அப்போலோவுக்கு படையெடுத்து வண்ணம் உள்ளனர். கனிமொழியின் கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் இன்னும் ஓரிரு நாட்கள் சிகிச்சை பெறுவார் என்றும் அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.