அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு அழைப்பு!

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவும் தென்கொரியாவும் அமெரிக்க அணு ஆயுதங்களை உள்ளடக்கிய கூட்டுப்போர் பயிற்சிகளை விரிவுபடுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ளவும், போரைத் தடுக்கவும் எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதல்களை நடத்தத் தயாராக ராணுவம் இருக்க வேண்டும்” என கூறினார்.

இந்நிலையில் வட கொரியாவின் ‘ரோடங் சின்முன்’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவுக்கு எதிராக போரிட எட்டு லட்சம் மக்கள் வட கொரிய ராணுவத்தில் இணைய ஆர்வமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வட கொரியா ‘வாசாங்போ-17’ என்ற கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியதுடன் போரை துாண்டும் வகையில் ஈடுபடும் அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுக்கவே இந்த ஏவுகணை பரிசோதனை என்றும் குறிப்பிட்டுள்ளது.

வட கொரிய தலைநகர் பியாங்காங்கின் சுனான் என்ற பகுதியிலிருந்து கிழக்கு கடல்பகுதியில் குறுகிய இலக்கை சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனையை வட கொரியா நேற்று நடத்தியது. இதை தென் கொரிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் வட கொரிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வருவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.