வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம்: சிறப்பு விசாரணை குழு கோரிய மனு தள்ளுபடி!

வேங்கை வயலில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்தது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை மர்மநபர்கள் சிலர் கலந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பண்ருட்டியை சேர்ந்த மார்க்கஸ் ரவீந்தரன் சார்பில் வக்கீல் ஜி.எஸ். மணி பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க தமிழக அரசு தவறிவிட்டது. எனவே இந்த விவகாரத்தை சி.பி.ஐ. அல்லது ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சஞ்சய் கிஷன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட மாநிலத்தில், குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விவகாரத்தை விசாரிக்க ஐகோர்ட்டு இருக்கும் போது சுப்ரீம் கோர்ட்டு இதில் ஏன் தலையிட வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், மனுதாரர் தேவைப்பட்டால் சென்னை ஐகோர்ட்டை நாடலாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.