அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது: மம்தா பானர்ஜி

ராகுல் காந்தி மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக மம்தா பதிவிட்டுள்ளார்.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சிகள்தான் பாஜக-வின் முக்கிய இலக்காக உள்ளது. மத்திய அமைச்சரவையில் கிரிமின்னல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதற்காக தகுதிநீக்கம் செய்யப்படுகின்றனர். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது’ என மம்தா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.