துரோகிகள் குறித்து டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்: டிடிவி தினகரன்

துரோகிகள் குறித்து டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரனிடம் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸுகு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அளித்த டிடிவி தினகரன், “ஒருசிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனம் அடைந்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகாலமாக ஒருசில சுயநலவாதிகளால் தமிழ்நாடு பாழடைந்துவிட்டது. தீயசக்தி திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர்கள்தான் இன்றைக்கு தவறான நடவடிக்கைகளில் சட்டமன்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள்” என்றார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், “அம்மாவுடைய தொண்டர்கள் இதுபோன்ற சுயநல, பதவி வெறியால் நடக்கின்ற பதவி சண்டைகளை பார்த்து எல்லோரும் வருத்தத்தில் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் அம்மாவின் உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை உணருகின்ற காலம் வெகு விரைவில் வரும்” என்றார்.

ராகுல் காந்தி சிறை தண்டனை குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், நீதிமன்ற தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றார்.

பாஜக அதிமுகவினிடைய ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், இன்னொரு கட்சியை பற்றி பேச நான் தயாராக இல்லை. ஆனால் துரோகிகள் குறித்து டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.

அதிமுக பொதுக்குழு சம்மந்தமான நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், துரோகிகள் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு சரியான தண்டனை கொடுப்பார்கள் என்றார்.

பொதுக்குழுவில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் ஆனால் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறி இருப்பது குறித்து பதில் அளித்த தினகரன், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் உள்ள விதி தான் அது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர் எம்ஜிஆர் தான். ஆனால் கருணாநிதி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் விருப்பத்திற்கு மாறாக எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினார்கள். ஆனால் எம்ஜிஆர் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக துரோகத்திற்கு எதிராக அண்ணா திமுகவை ஆரம்பித்தார்.

எந்த ஒரு நபரையும் குறிப்பிட்ட நபர்களின் ஆதரவைக் கொண்டு நீக்கக் கூடாது என்பதற்காக தான் குறிப்பாக பொதுச் செயலாளர் பதவியினை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என புரட்சித்தலைவர் விதியை கொண்டு வந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் கொண்டு வந்த விதியை எல்லாம் மாற்றி பொதுத் செயலாளர் தேர்தலில் போட்டியிட 20 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தேவை எனவும் மாற்றியுள்ளார். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் சுயநலம். பதவி வெறி. பணத்திமிர். அகங்காரத்தால் அம்மாவின் கட்சி இன்றைக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. காலம் சரியான வகையில் தீயவர்களுக்கு தீர்ப்பு வழங்கும். துரோகம் செய்தவர்களுக்கு வெகு விரைவில் மக்களும் தொண்டர்களும் தீர்ப்பு வழங்குவார்கள் என்றார்.