67 கோடி பேரின் தகவல்கள் திருட்டு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

24 மாநிலங்கள் மற்றும் 8 பெருநகரங்களை சேர்ந்த மொத்தம் 67 கோடி தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றதாக வினய் பரத்வாஜ் என்பவரை சைபராபாத் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர் ஜி.எஸ்.டி., பல்வேறு மாநிலங்களின் சாலை போக்குவரத்து நிறுவனங்கள், ஆன்லைன் வணிக தளங்கள், சமூக வலைத்தளங்கள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் வாடிக்கையாளர்களது தகவல்களை திருடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீட் மாணவர்கள், கல்வி நிறுவன மாணவர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பான் கார்டு வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள் ஆகியோரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றிருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு நேற்று கேள்வி எழுப்பியது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

67 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதற்காக திருடப்பட்டது? எப்படி திருடப்பட்டது? ராணுவத்தின் தகவல்களை திருடியது யார்? எப்படி திருடினார்கள்? இது, தனியுரிமை மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு மீதான தாக்குதல். இதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை விட பிரபலம் குறைந்த புதிய உளவு மென்பொருளை விலைக்கு வாங்கி, செல்போன்களை ஒட்டு கேட்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இதற்காக சுமார் ரூ.1,000 கோடி ஒப்பந்தத்தை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், அந்த போட்டியில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இச்செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி, மத்திய அரசை விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, பொதுமக்களையும், எதிர்க்கட்சிகள், நீதித்துறை, தேர்தல் கமிஷனர், பத்திரிகையாளர்கள் ஆகியோரையும் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் மோடி அரசு உளவு பார்த்தது. தற்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, வெளிநாட்டு உதவியுடன், நம் மக்களின் செல்போன்களை உளவு பார்க்க மீண்டும் சதித்திட்டம் தீட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. இது, ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.