சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

மே மாதம் 15 ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும், இல்லையென்றால் நாங்கள் மூடுவோம், பின்னர் டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். ஆன்லைன் ரம்மியால் சொத்துகளை இழந்தார்கள், உயிர்களை இழந்தார்கள். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது. ஆனால் டாஸ்மாக் மூலம் தான் அனைத்து விதமான சமூக கேடுகளும் நடக்கின்றன. அதனால்தான் டாஸ்மாக் கடைகளை அறவே மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறி வைத்துத் தாக்கும் போக்கு இருக்கிறது. ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். ஆளுநர்கள் இல்லாமல் மாநில அரசை எண்ணிப் பார்க்க முடியாது. சட்டமன்றத்திற்குள் கைகட்டி சும்மா பார்க்க மாட்டோம் என முதலமைச்சர் சொல்வது எல்லாம் ஆபத்தானது. கைகட்டி பார்க்க மாட்டோம் என்றால் என்ன அர்த்தம்?

2021ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கருப்பு பலூன் பறந்தது. ஆனால் இப்போது அதை நிறுத்திவிட்டு சரண் அடைந்துவிட்டனர். குடும்பமே போய் மோடியிடம் கை தூக்கி நிற்கின்றனர். இவர்கள் சங்கிகளாக மாறிவிட்டார்களா? இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இனிமேல் திமுக போடும் நாடகத்தை நம்பாதீர்கள். உங்களோடு ரம்ஜான் மாதத்தில் தொப்பி போட்டு வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம்.

மது பழக்கங்களுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும். பெண்களை விதவையாக்குவதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட ஆளுநர் ஒப்புதல் தேவை இல்லை. டாஸ்மாக் கடைகளைப் போல் பார்களில் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறது. கரூர் மூலமாக எத்தனை சட்டவிரோத பார்கள் நடக்கிறது என்பதை நிதித்துறை அமைச்சர் ஆய்வு செய்து சொல்ல வேண்டும். மே 15ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும். இல்லையென்றால் நாங்களே மூடுவோம். பின்னர் டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம். அதன்பிறகு மது தயாரிப்பு ஆலைகளை மூடப் போராட்டம் நடத்துவோம். தனிநபர் கஜானாவுக்கு பணம் போகிறது. பல இடங்களில் சட்டவிரோதமாக நடக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுடனும் பேச இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.