லாலு பிரசாத் யாதவுடன் நிதிஷ் குமார் முக்கிய ஆலோசனை!

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். டெல்லியில் மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி வந்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் அவரது மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார் நிதிஷ் குமார். மேலும் இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்வதற்கு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் தொடர்புடைய பண மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. லாலு பிரசாத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாஜகவை 100 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என நிதிஷ் குமார் கூறியிருந்தார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.