சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை, திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது: இபிஎஸ்

திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை நேரலையில் ஒளிபரப்பாததால் அதிமுக வெளிநடப்பு செய்தது. வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வயிறு வலியால் அந்த சிறுமி துடித்துள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. பெற்றோர்கள் அளித்த புகாரை பதிவு செய்து எப்ஐஆர் எதுவும் போடவில்லை. நேற்றைய தினம் இரவு குழந்தையின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த அரசானது ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. 5 வயது சிறுமி பள்ளி தாளாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. பிஞ்சு குழந்தையை அந்த பள்ளியின் உரிமையாளரே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோர் புகார் அளித்து 13 மணிநேரம் கழித்துதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து நான் சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும் போதே நேரலையை நிறுத்தி விட்டனர். வேண்டும் என்றே திட்டமிட்டு நேரலையை நிறுத்துகின்றனர். திட்டமிட்டு செய்கின்றனர். பெண் குழந்தையின் நிலைகுறித்து நான் பேசியதை புறக்கணித்து விட்டனர். எதிர்கட்சியினர் கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல், அமைச்சர்கள், முதல்வர் பதில் சொல்வதை மட்டுமே ஒளிபரப்புகின்றனர். இது என்ன ஜனநாயகம்? பிரதான எதிர்கட்சியினர் பேசுவதையும் ஒளிபரப்ப வேண்டுமே? அதிமுக ஆட்சியில் இருந்த போது எல்லோர் பேசுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை எடுத்து வைக்கும் போது அரசுதான் அதை கவனித்து சரி செய்ய வேண்டும். திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது. சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை. ஆளும் கட்சியினரின் கண் அசைவுக்கு ஏற்ப சபாநாயகர் செயல்படுகிறார். எதிர்கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர் சேர்ந்துதான் எதிர்கட்சித் தலைவர், எதிர்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுத்து சபாநாயகரிடம் அதற்கான ஆவணங்களை கொடுத்தும் அவர் அங்கீகரிக்க மறுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.