ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை மீண்டும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பும் வெளியான நிலையில் அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி அமர்வு பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும், பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்ப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கில் திட்டமிட்டபடி ஏப்ரல் 20, 21ஆம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை எனவும் தேவைப்பட்டால் ஏப்ரல் 24ஆம் தேதியும் இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம். எந்த முடிவு எடுத்தாலும் அது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.