திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் நாளை காலை வெளியீடு: அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் கடந்த ஆண்டு டிசம்பரில் பேசுபொருளானது. திமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து அண்ணாமலை விமர்சித்து வந்த நிலையில் திடீரென திமுகவினர் அண்ணாமலையின் வாட்ச் பற்றி கேள்வி எழுப்ப தொடங்கினர். அதாவது, ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவரால் ரபேல் வாட்சை எப்படி வாங்க முடிந்தது என்றும் அந்த வாட்சின் இந்திய மதிப்பு 10 லட்சம் ரூபாய் என்றும் பேச தொடங்கினர்.

இந்நிலையில் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் அதுகுறித்து கேட்டபோது, ”உலகத்திலேயே 500 ரபேல் வாட்சுகள் மட்டுமே செய்யப்பட்டன. அதில் ஒரு வாட்சை தான் நான் கட்டியுள்ளேன். ஏனென்றால் நான் ஒரு தேசியவாதி. என்னை தவிர வேறு யாரவது இதை வாங்குவார்களா? என தெரிவித்தார். அதற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜி, வாட்சை காசு கொடுத்து வாங்கி இருந்தால் அதற்கான ரசீதை பொது வெளியில் வெளியிட வேண்டும் என்று கூறினார். ஆனால், இதுவரை அண்ணாமலை அதனை வெளியிடவில்லை. மாறாக 2006-2011 மற்றும் தற்போதைய திமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட போவதாக அறிவித்தார். அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதியான நாளை காலை 10:15 மணிக்கு பட்டியலை வெளியிடுவதாக ஒரு ப்ரோமோ வீடியோவை டுவிட்டரில் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அதில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், எம்பி கனிமொழி, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மு.க. முத்து, அழகிரி, தயாநிதி அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அமைச்சர்களின் படங்கள் காட்டப்படவில்லை.

மேலும், மேற்கண்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பலவித தொழில்களை செய்துவருகின்றனர். ஏற்கனவே கலாநிதி மாறனின் சன் பிக்சர் விஷயத்தில் அண்ணாமலை எச்சரிக்கை செய்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கர்நாடகாவில் அதிகம் பணத்தை ஈட்டி வரும் சேனலில் ஒன்று உதயா டிவி. அதற்கு உரிமையாளர் திமுகவை சேர்ந்த கலாநிதி மாறன். தயாநிதி மாறன் எம்பியாக உள்ளார். இவர் பாஜகவை பற்றி கொச்சையாக பேசி வருகிறார். இன்னொரு முறை பாஜகவை பற்றி தயாநிதி மாறன் கொச்சையாக பேசினால் உங்களது அடிமட்டம் வரை செல்வோம். கர்நாடகாவில் உங்களது பிஸினசில் கை வைப்போம். எல்லா விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இங்கு செய்தி சேகரிக்க சன் டிவி சேனலும் வந்துள்ளது. உங்கள் சேனல் மூலமாககேவ நான் எச்சரிக்கிறேன், நீங்கள் கர்நாடகாவில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது குறித்து வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம் என அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி நேரம் குறித்த அண்ணாமலை, இந்த பட்டியலில் தற்போதைய ஆட்சியின் அமைச்சர்கள் மட்டுமல்ல, முந்தைய திமுக ஆட்சியின் அமைச்சர்களின் பெயர்களும் உள்ளன என்றும் இது எவ்வளவு அதிர்ச்சியளிக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த லிஸ்டில் திமுகவின் குடும்ப உறுப்பினர்களும் இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.