பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10.04.2023 அன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை இணைத்து அதனடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற கோரி பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சி தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமைகள் குறித்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படவுவதோ இல்லை. அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெருதும் பாதிக்கப்படுகிறது. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்ததந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப்போயுள்ளது.

மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும் அம்முயற்சியில் பலனளிக்கவில்லை. இதே நிலைதான் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளது.

இந்த சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசு மற்றும் இந்திய குடியரசுத்தலைவரையும் வலியுறுத்தி மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதி அது சம்பந்தமாக 10.04.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானத்தின் சாராம்சத்தையும் இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நோக்கம் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

தங்கள் சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசுகள் மற்றும் சட்டமாற்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்காக தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று தாம் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.