சமூக நீதியை நான் உயர்த்திப் பிடிப்பதற்கு அண்ணல் அம்பேத்கர்தான் காரணம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்!

சமூக நீதியை இன்று நான் உயர்த்திப் பிடிப்பதற்கு அண்ணல் அம்பேத்கர்தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசியுள்ளார்.

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நான் பிராமண சமூகத்தில் பிறந்தவன். இதுதான் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது. பிராமண சமூகத்தில் பிறந்த காரணத்தாலேயே, ஆரம்பகாலத்தில் எனக்கு இடஒதுக்கீடு முறையை பிடிக்காமல் இருந்தது. சட்டக்கல்லூரியில் படிக்க போதும் கூட, இடஒதுக்கீடுக்கு எதிராக நிறைய கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். அப்படி இருந்த நான், இன்றைக்கு இட ஒதுக்கீடை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர்தான். அவருடைய வாழ்க்கை முறையை படிக்க படிக்கதான், இடஒதுக்கீடு ஏன் அவசியம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அம்பேத்கரை மேலோட்டமாக மட்டும் தெரிந்து வைத்திருந்தால் இட ஒதுக்கீட்டின் அவசியம் நமக்கு புரியாது. எனவே அம்பேத்கரை அனைவரும் படிக்க வேண்டும். சமூக நீதியை இன்று நான் உயர்த்திப் பிடிப்பதற்கு அண்ணல் அம்பேத்கர்தான் காரணம். அதற்காக நான் அவரை கொண்டாடுகிறேன்.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். இதுவும் சர்ச்சைக்குரிய விஷயம்தான். இருந்தாலும் சொல்கிறேன். நான் 1968-ம் ஆண்டு பிறந்தவன். எனக்கு தமிழ் ஓரளவுக்கு தெரியும். ஆங்கிலம் அலுவல் ரீதியாக தெரியும். இந்த இரண்டு மொழிகளை தவிர வேறு எந்த மொழியும் எனக்கு தெரியாது. ஏனெனில் 1967-க்கு பிறகு நான் பிறந்தவன். ஆனால் எனக்கு முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்கள்.. உதாரணத்துக்கு ப. சிதம்பரத்தை எடுத்துக் கொண்டால், அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் வித்தகர். தமிழில் அவர் பேசினால் அவ்வளவு இனிமையாக இருக்கும். அதே நேரத்தில், ஆங்கிலத்தில் அவர் கரைக்கண்டவர். அதனால்தான், இன்றைக்கு இந்தியாவின் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராக ப. சிதம்பரம் இருக்கிறார்.

ஆகவே, நாம் அனைவரும் ப. சிதம்பரத்தை ஒரு ரோல் மாடலாக வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி முக்கியம்தான்.. அதே சமயத்தில் பன்மொழி புலமையையும் நாம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், நமது வாழ்க்கையில் நம்மால் உயர முடியும். மொழி வெறி நம்மை எங்கும் அழைத்துச் செல்லாது. இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் வருவதற்கு ஆதரவளித்தார். எனவே இந்தி, சமஸ்கிருதத்துக்கு எதிரான மனநிலையை நாம் வைத்திருந்தோம் என்றால் அது நமக்கு நல்லதல்ல. இவ்வாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசினார்.