எல்லோருக்கும் என்னைப்பற்றி புரிந்துகொள்ள ஒரு காலம் நேரம் வரும்: சசிகலா!

எல்லோருக்கும் என்னைப்பற்றி புரிந்துகொள்ள ஒரு காலம் நேரம் வரும் என்று சசிகலா கூறியுள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என தொடர்ந்து உரிமை கோரிவரும் சசிகலா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் எல்லோருக்கும் பொதுவான நபர். எனக்கென்று இது சொந்த ஊர், அது சொந்த ஊர் என்று நான் நினைத்தது கிடையாது. அதுபோல சாதியிலும் அப்படி நான் நினைத்தது இல்லை. அப்படி நினைத்திருந்தால், ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக நான் கொண்டு வந்திருக்கமாட்டேன். என்னைப் பொருத்தவரை புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்றுதான் பார்க்கிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் அப்படித்தான் பார்த்தார். அவர், ஒரு ஏழைக்கும் எம்எல்ஏ வாய்ப்பு கொடுத்து, வெற்றி பெற வைத்து அமைச்சராகவும் மாற்றியிருக்கிறார். நாங்கள் அப்படி வளர்க்கப்பட்டவர்கள். எனவே, என்னுடைய வழி தனிவழியாகத்தான் இருக்கும். எல்லோருக்கும் என்னைப்பற்றி புரிந்துகொள்ள ஒரு காலம் நேரம் வரும். அந்த காலநேரம் வரும்போது எல்லோருமே புரிந்துகொள்வார்கள்.

எதிர்க்கட்சிகள் பேச வேண்டிய நேரத்தில் எதை பேச வேண்டுமோ, மக்களுக்கு எதை எடுத்துக் கூற வேண்டுமோ, அதை பேச தவறுகின்றன. ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள ஓபிஎஸ் மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு கொடுத்தால், ஊடகங்களிடம் சொல்லாமலா சென்றுவிடப் போகிறேன். அழைப்பு வரட்டும். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்று பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.