இந்தியாவின் கொள்கைகள் எந்தவொரு வெளிப்புற அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதில்லை: ஜெய்சங்கர்

பல தசாப்தங்களாக இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் சக்திகளுக்கு இது ஒரு “வேறு இந்தியா” என்று இப்போது தெரியும், அது அவர்களுக்கு பதிலளிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். மேலும் இன்று சீனா மற்றும் பாகிஸ்தான் முன்வைக்கும் தேசிய பாதுகாப்பு சவால்களை நாடு எதிர்கொள்ள முடியும் என்று கூறினார்.

நேற்று ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இந்திய சமூகத்தில் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், நாட்டை புதிய இந்தியாவாக மாற்றுவது குறித்து பேசினார். இந்தியா தனது எல்லையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசிய ஜெய்சங்கர், “இன்று, மக்கள் எழுந்து நிற்கத் தயாராக இருக்கும் ஒரு வித்தியாசமான இந்தியாவையும், உரி தாக்குதலாக இருந்தாலும் சரி அல்லது பாலகோட் தாக்குதலாக இருந்தாலும் சரி, நாடு அதன் தேசிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும்” என்றார்.

2016ஆம் ஆண்டு இந்திய ராணுவப் படைத் தலைமையகத்திற்கு எதிராக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது கிளர்ச்சியாளர்கள் உரி தாக்குதல் நடத்தியதையும், 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்தியப் போர் விமானங்கள் பயங்கரவாதப் பயிற்சி முகாமுக்கு எதிராக நடத்திய பாலகோட் வான்வழித் தாக்குதலையும் அவர் குறிப்பிட்டார்.

‘‘இந்தியாவுக்கு எதிராக பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு, இந்தியா பொறுத்துக் கொண்ட சக்திகளுக்கு இன்று இது வேறு இந்தியா என்று தெரியும், அவர்களுக்கு இந்த இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்,” என்றார். சீனாவுடனான எல்லையில் உள்ள சவால்கள் குறித்தும் அவர் பேசினார்.

“கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒப்பந்தங்களை மீறி, சீனர்கள் பெரிய படைகளை கொண்டு வந்துள்ளனர். இன்று இந்திய ராணுவம் மிக உயரத்திலும், மிகவும் கடினமான சூழ்நிலையிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமை கடந்த காலத்திலிருந்து வேறுபட்டது. ஏனெனில் இந்திய வீரர்களுக்கு இப்போது முழு ஆதரவு உள்ளது. அவர்களிடம் சரியான உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளது.

கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டதால், சீனாவுடனான எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு வித்தியாசமான இந்தியா, அதன் நலன்களுக்காக நிற்கும், உலகம் அதை அங்கீகரிக்கும். இன்று, இந்தியாவின் கொள்கைகள் எந்தவொரு வெளிப்புற அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதில்லை. எங்கே எண்ணெய் வாங்க வேண்டும், எங்கு எண்ணெய் வாங்கக்கூடாது என்று சொல்லும் நாடுகளால் இன்று இந்தியாவை அழுத்தம் கொடுக்க முடியாது. இந்தியா தனது குடிமக்கள், அதன் நுகர்வோர் நலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும்’’ என்று பேசினார்.

உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்க கூடாது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுத்த போதிலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவது குறிப்பிடதக்கது.