2ஜி மேல்முறையீட்டு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

2ஜி அலைக்கற்றை மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் சிபிஐ, அமலாக்கத் துறை, ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், ஒன்றிய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் ஒன்றிய தணிக்கை துறை (சிஏஜி) சுட்டிக் காட்டியது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. வழக்கில் இருந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018ஆம் ஆண்டில் சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இதுவரை 6 நீதிபதிகள் விசாரணை நடத்தி உள்ளனர். முதல் நீதிபதியான பிர்ஜேஷ் சேத்தி நாள்தோறும் விசாரணை நடத்தி வந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி நீதிபதி பிர்ஜேஷ் சேத்தி மீண்டும் வழக்கு விசாரணையை தொடர்ந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அவர் ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஆஷா மேனன், யோகேஷ் கன்னா, எஸ்.பி.கர்க், நஜ்மி, ஏ.கே.சாவ்லா ஆகிய நீதிபதிகள் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர். தற்போது ஏழாவது நீதிபதியாக தினேஷ் குமார் ஷர்மா வழக்கை விசாரித்து வருகிறார். சிபிஐ, அமலாக்கத் துறை தாக்கல் செய்த 3 மேல்முறையீட்டு மனுக்களை அவர் ஒரே வழக்காக மாற்றியுள்ளார்.

நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா முன்பு வழக்கு நேற்று (ஏப்ரல் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ, அமலாக்கத் துறை, ஆ.ராசா மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா உத்தரவிட்டார். பதில் மனுக்கள் 5 பக்கங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.