பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே மத்திய அரசின் இலக்கு: ராகுல்

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே மத்திய அரசின் ஒரே இலக்காக உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

நாட்டில் ஏழை மக்களின் வருமானம் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பணக்காரர்களின் வருமானம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் வருமானமோ 10 சதவீதம் சரிந்துள்ளது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பொதுமக்களை எவ்வளவு துன்பப்படுத்தினாலும் ‘சூட்-பூட்’ அரசின் ஒரே இலக்கு (பிரதமர் மோடியின்) நண்பர்களின் கஜானாவை நிரப்புவது மட்டும்தான் என்று அவர் கூறி உள்ளார்.

இந்தப் பதிவுடன், “2 இந்தியாக்கள்: ஏழை, ஏழைதான், பணக்காரர், பணக்காரர்தான்” என்ற தலைப்பிலான் ‘கிராபிக்’ புள்ளி விவரத்தையும் இணைத்துள்ளார். இது, 2016-21-ம் ஆண்டுகளின், வருமான வளர்ச்சியைக் காட்டுகிறது. கவுதம் அதானி போன்ற சில குறிப்பிட்ட பணக்கார தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி சாதகமாக நடந்து வருவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதும், 2 இந்தியாக்கள் இருப்பதாகவும், ஒன்று பணக்காரர்களுக்கானது, மற்றொன்று ஏழைகளுக்கானது என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.