ஆர்எஸ்எஸ் பேரணி: காவல்துறை தனது கடமையை செய்ய வேண்டும்: பாஜக

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவல்துறை தனது கடமையை செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாத வகையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்தசூழலில் கட்டுப்பாடுகள் குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்போர் லத்தி, காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது. சாதி, மதம் உள்ளிட்டவை தொடர்பான கோஷங்களை பாடவோ, கோஷமிடவோ கூடாது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் என்று தமிழக டிஜிபி ஷைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தால், தடை செய்யப்பட்ட மத அடிப்படைவாத பிஎஃப்ஐ அமைப்பினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதாலும், சில சமூக விரோத தீய சக்திகள் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியை குலைத்து, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வாய்புள்ளதாலும் பேரணி நடக்க அனுமதி மறுத்தது காவல்துறை. ஆனால், பேரணியை அனுமதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அனுமதியை உறுதி செய்தது. அதன்படி, தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள், சமூக விரோத தீய சக்திகள் லத்தி மற்றும் காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு சென்று பேரணிக்குள் ஊடுருவி விடாமல் தடுப்பது காவல்துறையின் கடமை.

ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்க்கும் அடிப்படை மதவாத, சாதிய சக்திகள், சனாதன எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக பேரணி நடக்கும் இடங்களில் கோஷமிட அனுமதிக்காமல், பேரணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கண்காணிக்க வேண்டியது, பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை என்றே காவல்துறை தலைவரின் அறிக்கை இருந்திருக்க வேண்டும். யாரை காரணம் காட்டி அனுமதி மறுத்தீர்களோ, அவர்களை மறந்து விட்டு, காரணமே இல்லாமல் ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்போருக்கு அறிவுரை கூறுவது ஏனோ?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.