திமுக வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அண்ணாமலை

திமுக வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுகவினரின் சொத்து பட்டியலை கடந்த தமிழ் புத்தாண்டு அன்று அண்ணாமலை தனது கட்சி அலுவலகத்தில் இருந்தபடியே வெளியிட்டார். அதில் அன்பில் மகேஷ், உதயநிதி, எ.வ.வேலு, சபரீசன், உள்ளிட்டோரின் பெயர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் குறிப்பிட்டு இத்தனை ஆயிரம் கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அவருடைய பிரஸ்மீட் காமெடியாகவே இருக்கிறது. அவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார் என தெரியவில்லை. 15 நாட்களுக்குள் அவர் வெளியிட்ட சொத்து மதிப்பிற்கான ஆதாரங்களை அண்ணாமலை வெளியிட வேண்டும், இல்லாவிட்டால் அவர் மீது சட்டநடவடிக்கை பாயும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஆர்.எஸ்.பாரதி ஒரு நோட்டீஸையும் அண்ணாமலைக்கு அனுப்பியிருந்தார். அதில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுகவினர் மீது வைத்ததற்காக ரூ 500 கோடி நஷ்டஈடு கேட்டிருந்தார். இல்லாவிட்டால் தான் செய்தது தவறு என மன்னிப்பு கேட்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அண்ணாமலை இன்று அறிக்கை அனுப்பி பதில் அனுப்பியுள்ளார். அந்த பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோடிகளில் சொத்துகளை குவித்து வைத்திருக்கும் திமுகவினர் இருக்கும் போது என்னிடம் மேலும் ரூ 500 கோடி கேட்கிறார் திமுகவின் அமைப்புச் செயலாளர். DMK Files என்ற பெயரில் தமிழக பாஜக வெளியிட்ட காணொளி மற்றும் அதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக நான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை முழுவதுமாகப் பார்த்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் காணொளியின் இணைப்பையும் இணையதள முகவரியையும் தாங்கள் அனுப்பிய சட்ட அறிக்கையில் வெளியிட்டதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவினர் செய்த சொத்துக் குவிப்பை, தமிழக மக்கள் அறிந்து கொள்ள ஏப்ரல் 14 ஆம் தேதி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு உதவியதில் எனக்கும் மகிழ்ச்சியே.

தாங்கள் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கையில் திமுகவினருக்கு சொந்தமான 3478.18 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிகளும் பல்கலைக்கழகங்களின் மதிப்பு பொய்யானது என்று தெரிவித்து விட்டு அடுத்த வரியில் ஒருவர் திமுக உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும் அவருக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது என குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு புறம் இது திமுக சொத்து இல்லை என்றும் மறுபுறம் வழங்கப்பட்ட திமுகவினரின் சொத்து விவரம் பொய்யென்று கூறுவதற்கு மட்டும் திமுக அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா? திமுக பள்ளி மற்றும் கல்லூரி என்ற தலைப்பின் கீழ் ஒவ்வொரு ஊரிலும் திமுகவினருக்குச் சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் விவரங்கள் வழங்கப்பட்டது.

உதாரணத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் நடத்தும் சன்ஷைன் சீனியர் செகண்டரி ஸ்கூல், மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்களின் உறவினர் நடத்தும் தி சென்னை பப்ளிக் ஸ்கூல், அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி நடத்தும் ஜீவா வேலு இன்டர்நேஷனல் ஸ்கூல், அருணை பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி போன்றவற்றை ஒவ்வொருவர் பெயரில் காண்பித்திருக்கிறோம்.
இவர்கள் அனைவரும் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் ஒப்படைக்கிறார்கள் என்று தெரிவிக்கவில்லை. ஆர்.எஸ்.பாரதி இப்படி குற்றம் சொல்வதற்காக இப்படி மழுப்புவது போல் தெரிகிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடந்த ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அவற்றை சிபிஐயிடம் அளிக்கவுள்ளோம்.
உங்கள் கட்சியின் தலைவருக்கும் இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அது மட்டுமல்லாது, முன்னுக்கு பின் முரணாண சில கருத்துகளை ஆர்.எஸ். பாரதி தனது தமிழ் சுருக்கத்திலும் ஆங்கில சட்ட அறிக்கையிலும் தெரிவித்துள்ளார். ஒன்றில் நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என தெரிவித்துள்ளார். மற்றொன்றில் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்திற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனங்களில் பஷீர் முகமது என்பவர் இயக்குநராக இருந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்பு செயலாளர் எதற்காக பதில் அளிக்கிறார். ஆர்.எஸ். பாரதிக்கு ஒரு கூடுதல் தகவலையும் தெரிவிக்க விரும்புகிறோம். இதே நோபல் குழுமத்தின் ஒரு நிறுவனமான நோபல் பெரஸ் அன்ட் பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பஷீர் முகமதுடன் திமுக ராஜ்யசபா எம்பி எம்.எம். அப்துல்லா இயக்குநராக இருந்துள்ளார்.

நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட செய்தியை நேற்று எனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வியாக எழுப்பியுள்ளேன். நோபல் பெரஸ் அன்ட் பவர் லிமிடெட் நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ், இவை ஒரு குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்கள் என்பதும் திமுகவினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி யாருடையது என்றும் தமிழக மக்களின் சார்பாக நான் மீண்டும் ஒரு முறை கேள்வி எழுப்புகிறேன். இந்த முறையாவது பதில் அளிப்பீர்களா?

நேற்று முன் தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக் கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார். என் மீதும் பாஜக மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு ரூபாய் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன்.

4400 கோடி ரூபாய் மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை 2021 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 25 லட்சம் நன்கொடை பெற்றுக் கொண்ட புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் நான் பார்த்தேன். 100 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு இந்த நிதி மோசடியில் திரு ஸ்டாலின் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா என்றும் ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்.

அடுத்த 48 மணி நேரத்தில் என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்று மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.