எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மீது புகார்!

எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளா்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை எடப்பாடியில் தனியாா் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களான முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசிய பி.ஏ. ராஜேந்திரன், எடப்பாடி பழனிசாமியை விமா்சித்துப் பேசினாா். அப்போது அங்கு வந்த நகர அதிமுக நிா்வாகிகள் திடீரென கூட்ட அரங்கின் நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த அதிமுக கொடி, சின்னங்களை அகற்றினா். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அவா்களைப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது அவா்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து அதிமுக கொடி, சின்னங்களை அகற்ற வலியுறுத்தி எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் சாலையில் அமா்ந்து அதிமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியின் புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எடப்பாடி கே.பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி கே.பழனிசாமி, முருகன் உள்ளிட்ட 30 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் புகழேந்தி கலந்துகொண்டு திரும்பியபோது தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.