மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும்: மெகபூபா முப்தி

பலவீனமான பகுதிகளில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மெகபூபா முப்தி யோசனை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்கவில்லை. இது நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி ஒன்றுமையை பாதிக்கும் என பிரகாஷ் கரத் உள்ளிட்டோர் கூறியிருந்தனர். இது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘காங்கிரசுக்கு அறிவுரை கூறவோ, பரிந்துரை செய்யவோ நான் யாரும் இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் என்னால் சொல்ல முடியும். அதாவது எங்கெல்லாம் பா.ஜனதாவுடன் நேருக்கு நேர் மோதுகிறதோ, அங்கெல்லாம் அவர்கள் (காங்கிரஸ்) சண்டையிட வேண்டும். ஆனால் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார் என பலர் வலுவாக உள்ளனர். அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸ், மாநில கட்சிகளுக்கு அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் மூத்த பங்காளிகளாகவும், மாநில கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் இளைய பங்காளிகளாகவும் காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்றும் மெகபூபா தெரிவித்தார்.