மத்திய அரசுக்கு திமுக அடிமையாக செயல்படுகிறது: ஜெயக்குமார்!

மத்திய அரசுக்கு திமுக அடிமையாக செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை திரு.வி.க நகர் பகுதி அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அதிமுக ஆட்சி தான் தமிழக மக்களின் தொழில் வளர்ச்சிக்கு பொற்காலம். கொரோனா காலத்திலும் அதிமுக ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் கொண்டு வரப்பட்டது. ‘போட்டோ ஷூட்’ நடத்துவதற்காக ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்றதை போல தெரிகிறது. ஸ்டாலின் காலையிலும் பொய் பேசுறாரு, மாலையிலும் பொய் பேசுறாரு.. வாயை திறந்தாலே பொய் மட்டுமே பேசுகிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 700 நாட்கள் மேல் ஆகின்றன. இதுவரை எத்தனை இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளார்கள்? சட்ட ஒழுங்கை பாருங்கள்.. பாலியல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.. மக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.

செங்கோல் என்பது தமிழ் நாட்டின் தொன்மை தொட்டு அடையாளமாக காணப்படுகிறது. இது, தமிழனின் பெருமை, தமிழ் நாட்டின் பெருமை இதில் அரசியல் செய்ய கூடாது.. எழுச்சியாக பேரணி மூலம் சட்ட ஒழுங்கு மற்றும் கள்ள சாராயம் குறித்து ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிளைக் கழக செயலாளராக இருந்து ஒன்றிய செயலாளராக மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினர் என இன்று பொதுச் செயலாளராக படிப்படியாக உயர்ந்துள்ளார்.

துரோகத்தின் அடையாளமான கருணாநிதி எம்ஜிஆர் மூலமாக தான் அடையாளம் காணப்பட்டார். மத்திய அரசின் கொத்தடிமையாக திமுக செயல்படுகிறது. தங்கமணி அமைச்சராக இருந்த போது ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கவில்லை. தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் குடிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். பத்து ரூபாய்க்கு ஒரு பாட்டில் வாங்குற அமைச்சர் உலகத்தில் இருப்பார்களா? இவ்வாறு அவர் கூறினார்.