பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சி.எஸ்.கே.விற்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்: அண்ணாமலை

பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சி.எஸ்.கே.விற்கு வெற்றியை தேடித் தந்துள்ளார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். கடைசி 2 பந்தில் 10 ரன் தேவை என்ற நிலையில், 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜடேஜாவை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி. ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.