கடவுளைவிட தமக்கே அதிகம் தெரியும் என நினைப்பவர் பிரதமர் மோடி: ராகுல் காந்தி!

கடவுளைவிட தமக்கே அதிகம் தெரியும் என நினைப்பவர் இந்திய பிரதமர் மோடி; பிரபஞ்சத்தின் செயல்பாட்டை கடவுளுக்கே விளக்கி சொல்பவர் மோடி என கடுமையாக சாடி உள்ளார் ராகுல் காந்தி.

கர்நாடகா தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தோடு அமெரிக்காவுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. முதல் நாளான இன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ராகுல் காந்தி பேசியதாவது:-

இந்திய பிரதமர் மோடிஜிக்கு அருகில் கடவுள் உட்கார்ந்தால், பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என கடவுளுக்கே அவர் பாடம் எடுப்பார். நான் சொல்வது சரிதானே? தாம் படைத்தது என்ன என்பதே கடவுளுக்கே குழப்பமாகிவிடும். இந்தியாவில் சிலர் விஞ்ஞானிகளுக்கு அறிவியலை போதிப்பர்; ஆய்வாளர்களுக்கு வரலாற்றை சொல்லித் தருவார்கள். ராணுவ வீரர்களுக்கே ராணுவத்தைப் பற்றி சொல்லித் தருவார்கள். உண்மையில் அவர்களால் எதனையுமே புரிந்து கொள்ள முடியாது. எதனையுமே புரிந்து கொள்ளவே முடியாத அவர்களுக்கு எதனையுமே காது கொடுத்து கேட்கும் சகிப்புத் தன்மையும் இருக்காது.

வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்தியாவின் மோடி அரசு மறுக்கிறது. செங்கோல் மனோபாவம் கொண்டவர்களிடம் நாம் வேறு எதனையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பேசுகிறோம். காங்கிரஸ் கட்சி பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வருவோம். சில கூட்டணி கட்சிகள் எதிர்த்தாலும் கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் அரசு கொண்டு வரும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.