ஒடிசா ரயில் விபத்தில் 35 தமிழர்கள் பலி: தமிழக அரசு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிப்பு!

ஒடிசா ரயில் விபத்தில் 35 தமிழர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.

ஒடிசா மாவட்டம் பாலாசோர் மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில்கள் என இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட நிலையில் மூன்றாவதாக சரக்கு ரயிலும் இந்த ரயில்கள் மோதியதாக கூறப்படுகிறது. 3 ரயில்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் மொத்தம் 17 பெட்டிகள் உருக்குலைந்து இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது. மேலும் விபத்து நடந்த இடத்தில் 9 மீட்பு குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன என்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு ஒடிசா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.

இந்நிலையில் ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழர்கள் எண்ணிக்கை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில், கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த 101 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 17 பேர் பயணம் செய்யவில்லை என தெரியவந்துள்ளது. 53 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளனர். இதனை வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் உறுதி செய்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழு ஒடிசா சென்றுள்ளது. மேலும் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.