ஒடிசா ரயில் விபத்து: நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்யவேண்டும்: சீமான்!

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்யவேண்டும் என்று சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து நடந்த அன்று இரவு கட்டாக், பாலசோர் மற்றும் பத்ரக் ஆகிய பகுதிகளை சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் விபத்தில் காயமுற்றவர்களுக்கு ரத்த தானம் செய்ய கால்கடுக்க வரிசையில் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் கட்டாக் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த தகவலில், கட்டாக், பாலசோர் மற்றும் பத்ரக் ஆகிய பகுதிகளில் 3000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு தற்போது சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ‘குருதிக்கொடை பாசறை’ மூலம் ரத்த தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த உறவுகளை சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுகின்றனர். படுகாயமடைந்தவர்களின் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு ரத்த தேவை என்பது மிக அவசர, அவசிய பெருமளவு தேவையாக உள்ளது.

அரசியல் என்பது ‘அனைத்து உயிர்களும் நல்வாழ்வுக்கான தேவையை நிறைவு செய்கின்ற சேவைதான்’ என்ற புனித லட்சியத்தோடு உயிர்மநேய அரசியல் தொண்டாற்றி வரும் நாம் தமிழர் கட்சி தமது படைப்பிரிவின் ஒரு பகுதியாக குருதிக்கொடைப் பாசறையைத் தொடங்கி, கடந்த 11 ஆண்டுகளாகப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க, நமது குருதிக்கொடைப் பாசறையினர் மேற்கண்ட மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்கியும், குருதிக்கொடை வழங்கும் பணியை ஒருங்கிணைத்தும் வருகின்றனர்.

எனவே, நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும், என்னுயிருக்கினிய அன்புத் தம்பி – தங்கைகளும், நாம் தமிழர் உறவுகளும் உடனடியாக தொடர்புடைய மருத்துவமனைகளில் உள்ள நம்முடைய குருதிக்கொடை பாசறையினரைத் தொடர்புகொண்டு, குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னதப் பணியாற்றுமாறு உங்கள் அனைவரையும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.