பாரம்பரியமிக்க கலாசேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட உதவிப்பேராசிரியர் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது கலாசேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி. பாரம்பரிய பெருமை மிக்க இந்தக் கல்லூரி மத்தி. கலாச்சார அமைச்சகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலர், தங்களுக்கு பேராசிரியர் ஹரிபத்மன் தொடர்ந்து பாலியல் கொடுத்து வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு தேசியக் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவதாகவும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளின் இந்தப் போராட்டம் சட்டசபை வரை எதிரொலித்தது. இந்த விவகாரம் தொடர்பாக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சூழலில், திடீரென ஹரிபத்மன் தலைமறைவாகவே, அவரை போலீஸார் தேடி வந்தனர். பின்னர் தனது தோழி வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹரிபத்மனின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரி பத்மனுக்கு ஏற்கனவே சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாகவும், இதனால் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஹரிபத்மன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதால் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற ஹரிபத்மனுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
