சட்டசபைக்குள் குட்கா: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அதிமுக ஆட்சியில் குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.-க்களுக்கு அனுப்பிய உரிமைக் குழு நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாடு அரசால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்ததற்காக, அப்போதய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக எம்எல்ஏ-க்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டு, பேரவை உரிமைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக எம்எல்ஏ-களும் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை விசாரித்த தனி நீதிபதி, ரத்து செய்து தீர்ப்பளித்தார். இதுதொடர்பாக 2021ஆம் ஆண்டு சட்டபேரவை உரிமைக்குழு மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக எம்.எல்.ஏ.-க்களும், பாஜக-வில் இணைந்த கு.க.செல்வமும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மேல் முறையீட்டு மனு நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, இந்த மேல்முறையீடு வழக்கை விசாரிக்க வேண்டுமென வலியுறுத்த விரும்பவில்லை என தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.