மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

இந்திய மல்யுத்த சம்மளேனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான வழக்குகளில் ஜூன் 15ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருப்பதால், அதுவரை தங்களது போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது, பிரிஜ் பூஷணுக்கு எதிராக புதுடெல்லியில் நடைபெற்று வந்த மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மல்யுத்த வீரர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அறிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் அனுராக் தாக்குர் உடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புக்குப் பிறகு, போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா செய்தியாளர்களிடம் பேசுகையில், மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிரிஜ் பூஷணுக்கு எதிரான விசாரணை நடத்திமுடிக்கப்படும் என்று உறுதி அளித்திருப்பதால், எங்களது போராட்டம் ஜூன் 15ஆம் தேதி வரை மட்டும் நிறுத்திவைக்கப்படுவதாகவும், இந்த போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என்றும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் திறப்பின்போது, பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் மீது டெல்லி காவல்துறையினர் பதிவு செய்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று உறுதி அளித்திருப்பதாகவும் சாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று இரவு வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், “மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று டெல்லியில் உள்ள அனுராக் தாக்குரின் இல்லத்துக்கு மல்யுத்த வீராங்கனை சாக்‌சி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சென்றனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் 5 நிபந்தனைகள்: அனுராக் தாக்குரை சந்தித்துப் பேசிய அவர்கள் முன்வைத்த 5 நிபந்தனைகள்:

* மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும்
* மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
* தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
* மல்யுத்த கூட்டமைப்பில் பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பத்தினர் யாரும் இடம்பெறக் கூடாது
* கடந்த 28ம் தேதி நடந்த போராட்டத்தை அடுத்து தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். இந்த 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்தச் சந்திப்பில் வினேஷ் போகத் இடம்பெறவில்லை. ஹரியாணாவில் உள்ள அவரது சொந்த கிராமமான பலாலியில் நடைபெறும் பஞ்சாயத்தில் பங்கேற்க அவர் சென்றிருப்பதால் இந்தச் சந்திப்பில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.