ஸ்ரீ பெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவகம் முன்பு வீசப்பட்ட சூட்கேசால் பதட்டம்!

ஸ்ரீ பெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவகம் முன்பு காரில் வந்த மர்ம நபர்கள் சூட்கேஸ் வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மெட்டல் டிடெக்டரில் சோதனை செய்ததில் எச்சரிக்கை ஒலி வந்ததால் பொதுமக்கள் நெருங்காத வகையில் பேரிகார்டு மூலம் தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இதனை அடுத்து உயிர் நீத்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொண்டு நினைவகத்தை சுற்றி பார்த்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்ற கார் ஒன்று ராஜீவ் காந்தி நினைவகம் முன்பு நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர் காரில் இருந்து சூட்கேஸை ஒன்றை நினைவகம் முன்பு வீசிவிட்டு காரில் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை போலீசார் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்ததில் எச்சரிக்கை ஒலி எழும்பியுள்ளது. இதனால் அச்சமடைந்த போலீசார் உடனடியாக ஸ்ரீ பெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் ஸ்ரீ பெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார் தடவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு மர்ம நபர்கள் வீசி சென்ற சூட்கேஸ் அருகே யாரும் பொதுமக்கள் நெருங்காத வகையில் பேரிகார்டு மூலம் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதையடுத்து மோப்பநாய் உதவியோடு சம்பவ இடத்திற்கு வந்த தடவியல் நிபுணர்கள் சூட்கேஸை திறந்தனர். இதில் ஆச்சி மிளகாய் தூள் பொடி, பல் துவக்கும் குச்சி, பேஸ்ட் தைலம், என போன்ற பொருட்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.