அப்பறம் எதுக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கணும்?: சீமான்

செந்தில்பாலாஜிக்கு உடம்பு சரியில்லை என்பதால்தானே, ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க.. அப்பறம் எதுக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கணும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி சீமான்.

அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணத்துக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்… இதையடுத்து அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், அவருக்கு ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.. பிறகு ஆஞ்சியோ சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார். இது திமுக தரப்பினரை கடுமையான கொந்தளிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜி வந்த பிறகு நிறைய கள்ளச்சாராயம் வந்துவிட்டது. கைது என்றாலே அரசியல்வாதிகளுக்கு நெஞ்சுவலி வந்துவிடும்.. எத்தனை தெலுங்கு படத்தில் இந்த சீனை பார்த்திருப்போம்.. நெஞ்சு வலின்னு படுத்துக்குவார்கள்.. ஆஸ்பத்திரியில் நர்ஸ், மருத்துவரை கரெக்ட் செய்துவிட்டு அங்கேயே சரக்கு அடிப்பார்கள்.. தமிழ் சினிமாவில் இந்த மாதிரி நாடகம் போட்டவர்கள் எத்தனை பேரை விஜயகாந்த் ஆஸ்பத்திரிலேயே கைது செய்திருப்பார்.

செந்தில் பாலாஜியின் ஈசிஜி இயல்பு நிலையில் இல்லை என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.. ஆனால் அந்த செந்தில் பாலாஜியால் நாட்டு மக்கள் இரண்டு வருடங்களாக இயல்பு நிலையில் இல்லை.. அடிக்கடி கரன்ட் கட் ஆகுவதால் மின்சாரம் இயல்பு நிலையில் இல்லாததை போல சரக்கு அடிப்பவர்களும் இயல்பு நிலையில் இல்லை. இப்போது செந்தில் பாலாஜி ஏமாற்றிய வழக்கு மற்றும் அவர் மீதான குற்றசாட்டுகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.. இனி ஒரு 30 நாட்களுக்கு செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்துதான் எல்லா செய்தி சேனல்களிலும் விவாதம் செய்யப்படும்.. நாமளே கடுப்பாகி, “சரி நாங்க மறந்துட்டோம் வேற ஏதாவது பேசுங்கப்பா” என்று சொல்லணும். தயவு செய்து செய்தி சேனல்களை பார்க்காதீங்க. அப்புறம் நீங்கள் லூசு ஆகிடுவீங்க. தயவுசெய்து தொலைக்காட்சியை பார்க்காதீங்க.. செய்தியை பாரத்தாலும், சுவற்றுல முட்டிக்கிட்டு பைத்தியம் ஆகிடுவீங்க. நீங்களும் ஆஸ்பத்திரியில் படுத்துக்குவீங்க. செந்தில்பாலாஜிக்கு உடம்பு சரியில்லை என்பதால்தானே, ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க.. அப்பறம் எதுக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கணும்? அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழலுக்கு இப்போது சோதனை நடத்துறாங்களாம்.. ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழலுக்கு இப்போது சோதனைக்கு போயிருக்கிறார்கள்.. அப்படின்னா இவ்வளவு நாட்கள் என்ன செய்தீங்க?

தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.. அப்படின்னா, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழரை வேட்பாளராக நிறுத்துங்கள் பாஜகவுக்கு நாங்கள் ஓட்டு போடுகிறோம். இதெல்லாம் வாக்கு பெறுகிற ஒரு நுட்பம். எப்பவுமே பாஜக இப்படித்தான் செய்யும். அதிகமாக தமிழ் பற்றி பேசும். ஏனெனில் நான் தமிழ் பற்றி பேசுகிறேன். வளர்கிறேன் அதனால்தான் பாஜகவும் அப்படி பேசும். அப்புறம் ஈழத்தை பற்றி பேசும். இலங்கை இந்திய நட்புறவுன்னு சொல்றீங்க.. இந்தியா- ஈழ நட்புறவுன்னு சொல்றீங்க.. சரி அமித்ஷா சொல்றபடியே தமிழர் ஒருத்தர் பிரதமரா வரட்டும்.. எப்போ? 2024 தேர்தல்.. ஒரு தமிழர் பிரதமர் வேட்பாளர்னு அறிவியுங்க.. நாங்க எல்லாம் ஆதரித்து வாக்கு செலுத்திவிட்டுப் போகிறோம். அமித்ஷாவுக்கு அந்த துணிவு இருக்கிறதா? 2024-ல் ஒரு தமிழ் பிரதமர்.. யாரு? தம்பி அண்ணாமலையா? அல்லது அம்மா தமிழிசையா? இல்லை எங்க அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணனா? யாரு? சும்மா அப்படியே வாயிலேயே பாயாசம் காய்ச்சி..வடை சுட்டு எத்தனை காலத்துக்கு தமிழர்களை ஏமாளிகளா நினைச்சு பைத்தியகார கும்பலா நினைச்சுகிட்டு இருப்பீங்க? தமிழர் பிரதமராகட்டும்.. சரி.. வேட்பாளரை அறிவியுங்க.. சொல்லிட்டு இந்த தேர்தலை சந்திக்க முடியுமா? அப்ப எப்பவோ வரலாம்.. அதை நாங்க பார்த்துக்கொள்கிறோம்.. நீங்க சொல்லக் கூடாது. பாராளுமன்றத்துக்குள் போவோம்.. அல்லது நாங்கள் எங்களுக்கான பாராளுமன்றத்தை உருவாக்குவோம் அதில் என்ன இருக்கிறது?. இவ்வாறு சீமான் கூறினார்.