செந்தில் பாலாஜி விரைவில் முழுமையான உடல்நலம் பெற்றிடப் பிரார்த்திக்கிறேன்: பிடிஆர்

செந்தில் பாலாஜி விரைவில் முழுமையான உடல்நலம் பெற்றிடப் பிரார்த்திக்கிறேன் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது நள்ளிரவு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த விசயமே தனக்கு தற்போதுதான் தெரியும் தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:-

ஒரு நீண்ட விமானப் பயணத்தில், தற்போது தான் அயல்நாட்டுக்கு வந்திறங்கினேன். எங்களுடைய அமைச்சரவை சகா வி.செந்தில் பாலாஜி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருப்பதையும் தற்போது தான் அறிந்தேன். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்டப் பிரச்சினை ஒன்றை இந்தத் தருணத்தில் முதன்மைப்படுத்தி அடக்குமுறையான சூழலை உருவாக்கியிருப்பது வருத்தமளிக்கிறது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையிலும், 17 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அவர் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. எனது முதன்மையான கவலை அவரது உடல் நலன் பற்றியதுதான். அவரை நேரில் சந்தித்துப் பேச முடியாத நிலையில், அவர் விரைவில் முழுமையான உடல்நலம் பெற்றிடப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.