காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி!

நெஞ்சு வலிக்காக சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த பணமோசடி வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு இதய அறுவைச சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியை ஜூன் 28-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அவருக்கான சிறை அறையும் ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் அவரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அதே சமயத்தில், செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி அவரை காவேரி மருத்துவமனையில் சேர்க்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் சேர்க்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். இதையடுத்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் இரவு 9 மணியளவில் கிடைத்ததும், செந்தில் பாலாஜியை ஷிப்ட் செய்யும் வேலைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் இருந்து இரண்டு உயர்தர ஆம்புலன்ஸுகள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. பின்னர் செந்தில் பாலாஜி ஓமந்தூரரா் மருத்துவமனையில் இருந்து இரவு 9.45 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் செந்தில் பாலாஜியை மருத்துவக்குழுவினர் பரிசோதித்தனர். அடுத்தகட்டமாக வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாகவும் ஆலோசித்தனர். காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பைபாஸ் அறுவை சிகிச்சை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் இருந்து செந்தில் பாலாஜி இருந்த ஆம்புலன்ஸ் சென்றதும், அந்த ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து செல்வதற்காக பத்திரிகையாளர்கள் கார்கள் தயாராக இருந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் சென்ற அடுத்த வினாடி திடீரென போலீசார் தடுப்புகள் கொண்டு பாதையை வேறு எந்த வாகனங்களும் செல்லாதவாறு அடைத்து விட்டனர். பின்னர் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவிக்கவே 3 நிமிடங்கள் கழித்து தடுப்புகளை அகற்றினார்கள். அதனைத்தொடர்ந்தே கார்கள் அங்கிருந்து வெளியேறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.