சென்னை – திருநெல்வேலி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில்: எல்.முருகன்!

சென்னை – திருநெல்வேலி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் நிகழ்வின் தொடக்க விழா நடைபெற்றது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடைரோடு ரயில் நிலையத்தில் குருவாயூர் – சென்னை ரயில் நின்று செல்லும் நிகழ்வை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பி.அனந்த் தலைமை வகித்தார். ப.வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார். அப்போது பேசிய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்காக இதுவரை இல்லாத வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.6,080 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 73 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்துக்கு மட்டும் ரூ.413 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 புதிய ரயில் பாதைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பழநி – ஈரோடு புதிய ரயில் பாதை திட்டமும் அடங்கும். மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை – திருநெல்வேலி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.