இலாகா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு தடை கோரி, அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகளை இரு அமைச்சர்களுக்கு மாற்றிய அரசு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என அறிவித்தது. இந்நிலையில், எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வழக்கை எதிர்கொண்டுள்ள செந்தில் பாலாஜி, அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ள சூழலில், அவர் பதவியில் நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் 164(1) வது பிரிவின்படி, அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ள நிலையில், செந்தில் பாலாஜி, அமைச்சராக நீடிப்பது சட்டவிரோதமானது எனவும், ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் உள்ளவரை அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது அரசியல் சாசன அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை வீழ்த்தி விடும் என்பதால் செந்தில் பாலாஜி அமைச்சராக கடமையாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும், அமைச்சர்களுக்கான எந்த சலுகைகளையும் வழங்கக் கூடாது எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.