திட்டமிட்டு பொய்யுரைகளை பரப்பும் தமிழ்நாட்டு ஆளுநர் ரவி: முத்தரசன் கண்டனம்!

தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார மேம்பாட்டு வரலாற்றை பற்றி தவறான கருத்துக்களை கூறிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு எதிப்பு வலுக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

வரலாற்றை பற்றி தவறான கருத்தை தொடர்ந்து கூறிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒன்றை உளறிக் கொட்டியுள்ளார். சாதிய சனாதன சமூக கட்டமைப்பை உடைக்கவும், அதன் கருத்தியலை தாக்கி அழிக்கவும் ஒலித்த முதன்மைக்குரல் வள்ளலார் குரல் ஆகும். சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட் பெரும் சோதி என்றும் சாதியும், மதமும் சமயமும் வேண்டேன் சாத்திரக் குப்பையும் வேண்டேன் எனவும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் எனவும் முழங்கியவர்.

அருட் பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை என தமிழகத்தில் ஆன்மிகத்தில் சாதி, மத பேதமின்றி அனைவரையும் உள்ளடக்கிய புதிய தடம் பதித்தவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என அனைத்துயிர்களின் சமத்துவம் பேசியவர். இத்தனை சிறப்புக் கொண்ட வள்ளலாரை பார்ப்பனிய, சாதியத்தை உயர்த்தி பிடிக்கும் சனாதனத்தின் உச்சம் என ஆளுநர் கூறியதை என்னவென்று சொல்வது? திட்டமிட்டு இப்படி பொய்யுரைகளை பரப்பும் தமிழ்நாட்டு ஆளுநர் ரவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.