டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார்!

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு சில தினங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமினம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும். டிஎன்பிஎஸ்சி 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளது. எனினும் டிஎன்பிஎஸ்சியில் தற்போது 2 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார். டிஎன்பிஎஸ்சிக்கு நிரந்தரமாக தலைவர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தேர்வுகள், தேர்வு முடிவுகள் வெளியீடு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு வரும் 30ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 62 வயது வரை டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவராகவோ, உறுப்பினராகவோ பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.