ஒரு தமிழர் பிரதமராக வர முடியும் என்றால் எடப்பாடியார் ஏன் வரக்கூடாது: செல்லூர் ராஜு

ஒரு தமிழர் இந்தியாவின் பிரதமராக வர முடியும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார். ஏன் எங்களுடைய எடப்பாடியார் வரக்கூடாது. அதை நினைத்துக் கூட அமித்ஷா சொல்லியிருக்கலாம்தானே என்று செல்லூர் ராஜூ கூறினார்.

தமிழர் பிரதமராக வேண்டும் என்று தமிழகத்திற்கு வந்த அமித்ஷா பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அமித்ஷா பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே தமிழர் பிரதமராக வேண்டும் என்று கூட அமித்ஷா சொல்லியிருக்கலாம் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:-

மாநிலங்களில் வலுவாக இருக்கும் கட்சிகள் தான் கூட்டணிக்கு தலைமை என்ற விவகாரத்தில் முதல்வர் சொல்வதுதான் சரி.. இந்த விவகாரத்தை பொறுத்தவரை முதல்வர் சொல்வது சரிதான். எந்த கட்சி மாநித்தில் செல்வாக்குடன் இருக்கிறதோ.. அந்த கட்சிதான் தலைமை ஏற்கும். இது நிதர்சனமான உண்மை. அதைத்தான் அதிமுகவும் சொல்கிறது. கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை தாங்குவோம். நாங்கள் சொல்வதை போல அவரும் சொல்கிறார்.

கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை தாங்குவோம் என்று அண்ணாமலை சொல்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டடதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, இதையெல்லாம் இப்போது பேசி முடிவு எடுக்க வேண்டியது இல்லை. எங்கள் தலைமை முடிவு செய்யும் என்று அண்ணாமலையே சொல்லிவிட்டார். தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி.. வருகிற கட்சியை சேர்த்துக்கொள்கிறோம். வராத கட்சியை பற்றி எங்களுக்கு கவலையே இல்லை. அது எந்த மாதிரியான கட்சியாக இருந்தாலும் சரி.. அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதைத்தான் அண்ணாமலையும் சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில் பேசி முடிவு செய்து கொள்ளலாம் நான் எதுவும் சொல்ல முடியாது.. அது தலைமைதான் முடிவு செய்யும் என்று சொல்லியிருக்கிறார். நீங்களாக (செய்தியாளர்கள்) சொல்லக்கூடாது.

ஒரு தமிழர் இந்தியாவின் பிரதமராக வர முடியும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார். ஏன் எங்களுடைய எடப்பாடியார் வரக்கூடாது. அதை நினைத்துக் கூட அமித்ஷா சொல்லியிருக்கலாம்தானே.. எடப்பாடி திறமையை பார்த்துக் கூட இப்படி சொல்லியிருக்கலாம். 2014ல் மோடியா லேடியா என்று ஜெயலலிதா கூறினார். அப்போது அதிமுகவிற்கு தான் வாக்களித்தார். அதேபோல இப்போது எடப்பாடிக்கு இருக்கும் செல்வாக்கை பார்க்கும் போது எடப்பாடிக்கே வாக்களிக்கலாம். அதை எல்லாம் சொல்ல முடியாது. ஒரு கட்சியை வளர்ப்பதற்கு அகில இந்திய தலைவர்கள் பல கருத்துக்களை சொல்வார்கள். அதையெல்லாம் அளவு கோளாக எடுத்துக் கொள்ள முடியாது. கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இன்னைக்கும் கூட்டணியில் இருக்கும் நாளைக்கு இருக்காது. அதையெல்லாம் சொல்ல முடியாது” என்றார்.

அப்போது அண்ணாமலை பாஜக தலைமையில் தான் கூட்டணி என்கிறாரே என்ற கேள்விக்கு அண்ணாமலையாவது உண்ணாமலையாவது என காட்டமாக கூறியதுடன் கூட்டணி குறித்து அவரது கட்சி தலைமையே முடிவெடுக்கும், அவர் அல்ல என்றும் தெரிவித்தார்.

வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்து குறித்து செயதியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த செல்லூர் ரஜூ, ஆளுநரை விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை. ஆளுநரை வாழ்த்தவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை” என்றார். தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மட்டுமே போட்டி என்றும் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.