நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம்: எதிர்க்கட்சி தலைவர்கள்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும்.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. பீகார் முதல் – மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர். பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நிறைவடைந்த நிலையில் நிதிஷ்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கூட்டம் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் நடைபெற்றது. பாட்னாவில் 15 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் நிறைவு பெற்றது. இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தோம். 17 கட்சிகள் இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என முடிவெடுத்துள்ளோம். எதிர்க்கட்சித்தலைவர்கள் ஒருமனதாக ஆலோசித்து முடிவெடுத்துள்ளோம். சிம்லாவில் விரைவில் 2-வது கூட்டம் நடைபெறும். பாஜகவை எப்படி எதிர்க்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தோம். பாஜக அல்லாத பெரும்பாலான மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர் என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொது தேர்தல் அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசித்தோம். அடுத்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத் தேர்தல் அறிக்கை குறித்து முடிவெடுப்போம். எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12ம் தேதி சிம்லாவில் நடைபெறும் என்றார்.

அதனை தொடர்ந்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிம்லாவில் நடக்கும் 2-வது போட்டியில் பாஜகவை வீழ்த்துவது குறித்து விரிவாக விவாதிப்போம். அமலாக்கத்துறை, சிபிஐ முகமைகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது. பாஜக வரலாற்றை மாற்ற முனைகிறது, நாங்கள் வரலாற்றை காப்பாற்ற நினைக்கிறோம். எந்த விவகாரத்திலும் மாநில அரசுகளை மத்திய அரசு கலந்து ஆலோசிப்பதில்லை. நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம், ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும். மத்திய அரசிடம் எல்லாவற்றுக்குமே போராட வேண்டி உள்ளது என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:-

நாட்டின் கட்டமைப்பை பாஜகவும், ஆர் எஸ் எஸ்-ம் சிதைக்கிறது. வேறுபாடுகள் இருந்தாலும் கருத்தியலுக்காக இணைந்துள்ளோம் என்றார்.